வரலாறு என்ற சொல் இறந்த காலத்தைப் பற்றிய தகவல்கள் என்னும் பொருளிலேயே பொதுப்படையாகப் பயன்படுகிறது. ஒரு கற்கைத் துறையைக் குறிக்கும் போது, பதிவுசெய்யப்பட்ட மனித சமுதாயங்களின் கடந்தகாலமான, மனிதவரலாற்றையே குறிக்கின்றது. வரலாற்றறிஞர்கள், எழுதப்பட்ட அல்லது அச்சிடப்பட்ட பதிவுகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு), மற்றும் தொல்பொருளியல் உள்ளிட்ட பலவகையான மூலங்களைப் பயன்படுத்துகிறார்கள். மனிதனால் பதிவு செய்யப்படுவதற்கு முன் நிகழ்ந்தவை வரலாற்றுக்கு முற்பட்டவை எனப்படுகின்றன.
முசிறி-அலெக்சாந்திரியா வணிக உடன்படிக்கை என்பது கிபி 2ஆம் நூற்றாண்டில் சங்ககாலச் சேரர்களின்துறைமுகப் பட்டினமானமுசிறித் துறைமுக வணிகர்களுக்கும் எகிப்து நாட்டு துறைமுகப் பட்டினமான அலெக்சாந்திரியா வணிகர்களுக்கும் நடந்த வணிக ஒப்பந்தம் ஆகும். தற்போது வியன்னா நகர அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இந்தக் கோப்பு எகிப்திய மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே நடந்த கடன் மாற்று விவரங்களை குறிப்பிடுகிறது. இதில் கங்கைச் சமவெளியிலுள்ள இலாமிச்சை, தந்தம், ஆடைகள் போன்றவற்றை 25 சதவீத சுங்க வரியுடன் விற்கப்பட்டது குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய வரலாற்றில் திருப்புமுனையாய் அமைந்த இந்த உடன்படிக்கையிலுள்ள செல்வத்தைக் கொண்டு பண்டைய எகிப்து நாட்டு நைல் நதியை சுற்றியுள்ள 2400 ஏக்கர் பண்ணை நிலங்களை விலைக்கு வாங்கலாம்.
மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர் திப்பு சுல்தான். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூர் பேரரசை ஆண்ட இவர் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியுடன்பல முறைப் போரிட்டவர். ஆர்த்தர் வெல்லஸ்லியின் தலைமையிலான ஆங்கிலப் படைகளுடன் நடைபெற்ற நான்காவது ஆங்கிலேய மைசூர்ப் போரில் திப்பு மரணமடைந்தார். படத்தில் காணப்படும் ஓவியம் 1800ம் ஆண்டு என்றி சிங்கில்டன் என்பவரால் வரையப்பட்டது. இதில் போரிட்டு மடியும் திப்புவின் இறுதி நிமிடங்கள் சித்தரிக்கப்பட்டுள்ளன.